Monday, March 23, 2026

புதுச்சேரி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியல் வெளியானது

பதிவு:  திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 04:00 AM

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும் அக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

இது குறித்து த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் லாஸ்பேட்டை தொகுதியில் வி. சாமிநாதனும், காரைக்கால் தெற்கில் கே.ஏ.யு. அசனாவும் களம் காண்கின்றனர். மேலும், உழவர்கரை தொகுதியில் எஸ். சசிபாலன், ராஜ்பவன் தொகுதியில் வி.ஜே. சந்திரன், மற்றும் முதலியார்பேட்டையில் என். மணிபாலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களில் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; மங்கலம் தொகுதியில் எம்.கே. சத்யாவும், கதிர்காமம் தொகுதியில் ஆர். ஜெயந்தியும் போட்டியிடுகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 30 வேட்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள விஜய், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, தவெக வேட்பாளர்கள் அனைவரும் 'விசில்' சின்னத்தில் போட்டியிடுவதாகவும், அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளுக்கு இடையே தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் நேரடியாகக் களம் காண்பதால், அங்கு தேர்தல் போட்டி மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. 

இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் தோழர்கள், குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். 

01. லாஸ்பேட்டை - V.சாமிநாதன்

02. காரைக்கால் தெற்கு - K.A.U.அசனா

03. நெட்டப்பாக்கம் (தனி) - L.பெரியசாமி

04. திருபுவனை (தனி) - AK. சாய் J. சரவணன் குமார்

05. முத்தியால்பேட்டை - J.பிரகாஷ் குமார்

06. பாகூர் - N.தனவேலு

07. ராஜ் பவன் - V.J.சந்திரன்

08. உப்பளம் - S.சிவா

09. உழவர்கரை - S.சசிபாலன்

10. அரியாங்குப்பம் - S.குமரவேலு

11. மணவெளி - B.ராமு

12. வில்லியனூர் - R.ரமேஷ்

13. முதலியார்பேட்டை - N.மணிபாலன்

14. மண்ணாடிப்பட்டு - K.பாரதிதாசன்

15. உருளையன்பேட்டை - S.மரிய பிரான்சிஸ்

16. மங்கலம் - M.K.சத்யா

17. காமராஜ் நகர் - Dr.R.சுமன்

18. நெல்லித்தோப்பு - S.விக்னேஷ்வரன்

19. காலாப்பட்டு - D.சசிக்குமார்

20. இந்திரா நகர் - S.முருகன்

21. கதிர்காமம் - R.ஜெயந்தி

22. ஊசுடு (தனி) - S.சரகணபவா

23. தட்டாஞ்சாவடி - M.பன்னீர்செல்வம்

24. ஏம்பலம் (தனி) - V.தமிழ்ச்செல்வன்

25. நெடுங்காடு (தனி) - U.காமராஜ்

26. திருநள்ளாறு - A.ராஜா முஹம்மது

27. காரைக்கால் வடக்கு - A.வெங்கடேஷ்

28. நிரவி -T.R. பட்டினம் - G.கணேஷ்

29. மாகே - M.பிரிஜேஷ்

30. ஏனாம் - A.தோட்டா ராஜூ

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழக வேட்பாளர்கள், நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் சிறப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு, கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள், உரம் விநியோகம் குறித்து பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

பதிவு:  திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 03:30 AM

புதுடெல்லி,

மேற்காசிய போர் சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலியம், எரிவாயு, மின்சாரம், உரத் துறைகள் தொடர்பான நிலைமையை ஆராய்வதற்கான உயர்மட்ட கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர்.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உர விநியோகத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் உரங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. உலகளாவிய பொருளாதாரம், எரிசக்தி ஆதாரத்தில் ஸ்திரமின்மை நிலவினாலும், உள்நாட்டு நுகர்வோர் மற்றும் தொழில் துறையினரின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக பிரதமர் உறுதியளித்தார்.

கடல்வழிப் போக்குவரத்து குறித்த விளக்கத்தின் போது, பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள 22 இந்தியக் கப்பல்களும், அவற்றில் பணியாற்றும் 611 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்கா தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக முன்கூட்டியே முன்பதிவு செய்வது குறைந்துள்ளதாகவும் இந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலிண்டர்களைப் பதுக்குபவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது மாநில அரசுகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

வணிக மற்றும் வீட்டு உபயோகத்துக்காக புதிய பிஎன்ஜி (குழாய் வழி எரிவாயு) இணைப்புகளை வழங்க மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா தனது உரத் தேவையில் சுமார் 70 சதவீதத்தை ஓமன், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துதான் கப்பல்கள் வரவேண்டும். போர் காரணமாக இந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி போன்ற முக்கிய உரங்கள் வழங்கப்படுகின்றன. போர் பதற்றத்தால் உலகளவில் உரத்தின் விலை அதிகரித்தாலும், இந்தியாவில் உரத்தின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. விவசாயிகளைப் பாதிக்காத வகையில் பழைய விலையிலேயே உரங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

8,931 நாட்கள் - புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி

பதிவு:  திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 03:20 AM

புதுடெல்லி,

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் தலைவராக அதிக நாட்கள் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். 

நேற்றுடன் (மார்ச் 22) தனது பதவிக்காலத்தில் 8,931 நாட்களை பிரதமர் மோடி பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம், இதற்கு முன் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் வசம் இருந்த 8,930 நாட்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

குஜராத் முதலமைச்சராக இருந்த காலம் தொடங்கி தற்போது பிரதமராக பதவி வகிக்கும் காலம் வரை இந்த சாதனையில் அடங்கும்.  2001-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, மே 21, 2014 வரை சுமார் 13 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார். 

அதன்பின், 2014-ம் ஆண்டு மே 26 அன்று இந்தியாவின் 14-வது பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 2019 மற்றும் 2024 பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பணியாற்றி வருகிறார். இதன் மூலம், சுமார் 25 ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராகத் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

பிரதமர் மோடியின் இந்த சாதனைக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்துச் செய்தியில், "பிரதமர் மோடியின் வாழ்க்கை, தேசத்திற்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பயணம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கடின உழைப்பு மற்றும் தேசத்தின் மீது கொண்ட மாறாத அர்ப்பணிப்பால் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது" என்று பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடி ஏற்கனவே இந்தியாவின் இரண்டாவது நீண்டகாலப் பிரதமர் என்ற பெருமையை இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து பெற்றுள்ளார். இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 16 ஆண்டுகள் 286 நாட்கள் (மொத்தம் 6130 நாட்கள்) என்ற சாதனையை முறியடிக்க அவர் இன்னும் சில ஆண்டுகள் பணியாற்ற வேண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ஒரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமர் ஆகிய இரண்டு பொறுப்புகளையும் சேர்த்து 'அரசுத் தலைவராக' அதிக நாட்கள் பணியாற்றிய இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

Sunday, March 22, 2026

மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும் - ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி பேசியது என்ன? - தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யவும் வலியுறுத்தல்

பதிவு:  ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026, பங்குனி 08, விசுவாவசு வருடம் 01:00 AM

புதுடெல்லி,

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும். தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஈரான் ராணுவ, அணுசக்தி தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள், எண்ணெய் வயல்கள் என 8,000-க்கும் மேற்பட்ட இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1,444 ஈரான் நாட்டினர் உயிரிழந்துள்ளனர். 18,551 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 20 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 3,730 பேர் காயமடைந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 158 பேர் காயமடைந்திருக்கின்றனர். ஈரான் ராணுவத் தாக்குதலில் சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளும் கடுமையாகப் பாதித்துள்ளன.

போரின் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்கள் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக முடக்கியது. இதனால் ஆசிய நாடுகளுக்கான 85 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கி, எல்பிஜி, எல்என்ஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் ரஷ்யா, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு பகிரங்கமாக ஆதரவு அளித்து வருகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் நேரடியாக போரில் இறங்கவில்லை என்றாலும் அமெரிக்காவுக்கு மறைமுக ஆதரவு தருகின்றன.

இந்தச் சூழலில் நடுநிலையான உலகத் தலைவர்கள் இதில் தலையிட்டு சமரச பேச்சு நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.இது தொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அதிகாரி கர்னல் டக்ளஸ் மெக்கிரிகோர் கூறும் போது,போரை நிறுத்த இருதரப்பிலும் சமரசம் பேச இந்திய பிரதமரால் மட்டுமே முடியும்.ராணுவ, அரசியல்ரீதியாக உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. பிரதமர் மோடி அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்றார். ஐரோப்பிய, வளைகுடா நாடுகளின் தலைவர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.

இந்தச் சூழலில் கடந்த 18-ம் தேதி ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், குவைத் இளவரசர் ஷேக் சபா அல் காலித் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். கடந்த 19-ம் தேதி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினார்.

இதனிடையே மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் பெல்ஜியம் சென்று அங்கு ஐரோப்பிய தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் அமைச்சர்களுடன் தொலைபேசியில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு ரமலான் மற்றும் ஈரான் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்த பண்டிகை காலத்தில் மேற்கு ஆசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை, ஒளிமயமான எதிர்காலம் அமைய இருவரும் விரும்புகிறோம்.

பிராந்தியத்தின் முக்கிய கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சர்வதேச விநியோக சங்கிலி அறுபட்டிருக்கிறது. இதனால் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. தடையற்ற கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அந்த நாட்டு அரசுதொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கிறது. அதற்காக நன்றி தெரிவித்தேன். இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியா, ஈரான் தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப இந்திய பிரதமர் மோடி தீவிர முயற்சிசெய்து வருகிறார். தற்போதைய சூழலில் சில நேர்மறையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடையை அமெரிக்கா ஒரு மாதத்துக்கு நீக்கியிருக்கிறது. மேலும் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை கைவிடுவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். பிரதமர் மோடி மட்டுமின்றி, உலக நாடுகளும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானுக்கு அதிக அழுத்தம் தர வேண்டும். அப்போதுதான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என்றனர்.

Saturday, March 21, 2026

டெல்லியில் முடிவான அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு - யாருக்கு எத்தனை சீட்..?

பதிவு: சனிக்கிழமை,  மார்ச் 21, 2026, பங்குனி 07, விசுவாவசு வருடம் 02:40 AM

சென்னை,

கூட்டணி கட்சிகள் போட்டியிடுவது இரட்டை இலையிலா அல்லது தாமரையிலா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த (2021) சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில், அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ம.க. 23 (மாம்பழம்), பா.ஜ.க. 20 (தாமரை) தொகுதிகளில் போட்டியிட்டாலும், ஏனைய கட்சிகள் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையிலேயே போட்டியிட்டன. 

அதாவது, த.மா.கா. (6), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1), மூவேந்தர் முன்னேற்ற கழகம் (1), அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் (1), பசும்பொன் தேசிய கழகம் (1), பெருந்தலைவர் மக்கள் கட்சி (1), புரட்சி பாரதம் (1) ஆகிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டன. ஆக மொத்தம் 191 பேர் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டனர். 

அ.தி.மு.க.  கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. புதிய தமிழகம் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு குறித்து விரிவாக பேசப்பட்டது.

மேலும், கூட்டணி கட்சிகள் போட்டியிடுவது தனிச் சின்னத்திலா, அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையிலா, பா.ஜ.க.வின் சின்னமான தாமரையிலா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 

இறுதியில், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அழைப்பின் பேரில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் நேற்று டெல்லி சென்றுள்ளனர். 

அவர்கள் இருவரும் அமித்ஷாவை சந்தித்து பேசும்போது, பா.ம.க., அ.ம.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

டெல்லியில் இருந்து வெளியான தகவல்படி, அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. 162 (இரட்டை இலை), பா.ஜ.க. 31 (தாமரை), பா.ம.க. 17 (மாம்பழம்), அ.ம.மு.க. 9 (குக்கர்), த.மா.கா. 4 (தனிச்சின்னம்), இந்திய ஜனநாயக கட்சி 2 (தாமரை), புதிய நீதிக்கட்சி 2 (தாமரை), புதிய தமிழகம் 2 (தாமரை), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 2 (தாமரை), பார்வர்டு பிளாக் 1 (தாமரை), பெருந்தலைவர் மக்கள் கட்சி 1 (தாமரை), புரட்சி பாரதம் 1 (இரட்டை இலை) ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது. 

அதாவது, இரட்டை இலை சின்னத்தில் 163 பேரும், தாமரை சின்னத்தில் 41 பேரும் களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

Friday, March 20, 2026

5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை - நாதக சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026

பதிவு:  வெள்ளிக்கிழமை,  மார்ச் 20, 2026, பங்குனி 06, விசுவாவசு வருடம் 03:40 AM

சென்னை,

அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்:

தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தை மாற்றுவோம்

சென்னை மட்டுமே தலைநகரா இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாம். அதனால், நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும்.

தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்

தமிழகத்தின் மையத்தில் உள்ள திருச்சி முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். சென்னை தொழில்நுட்ப தலைநகராகச் செயல்படும். கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் செயல்படும்.

பெண்களுக்குத் தனித்தொகுதி

உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. பெண்களுக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தனித்தொகுதிகள் போராடி பெறப்படும்.

மாநிலத்தில் தன்னாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது பெயரளவே உள்ளது. இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 7-வது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகின்ற முறையில் ஒன்றிய அரசு 97 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் மாநில அரசு 66 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது.

இவை தவிர, ஒன்றிய அரசும் மாநில அசுகளும் சேர்ந்து 47 துறைகளில் சட்டம் இயற்றலாம் என்றிருக்கிறது. ஆக ஒன்றிய அரசிடம் 144 துறைகளில் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ளது. இது ஒன்றியத்தில் ஒற்றையாட்சி முறையையும், தன்னதிகார குவிப்பையும் உறுதி செய்கிறது.

எனவே, நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர பாடுபடுவோம்.

தமிழர்களுக்கு முன்னுரிமை

தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். நாம் தமிழர் அரசானது தமிழ்நாட்டில் தமிழ்க் குடிகளுக்கு இடப்பங்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அதே முன்னுரிமை பிறமொழி வழி தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும்.

தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை

தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை

தன்னலம் சார்ந்த கொடுமையான ஆட்சி முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது ஆட்சிமுறை தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையாக இருக்கும்.

மணல் கொள்ளைத் தடுப்பு

அங்குலம் ஆற்றுமணல் உருவாக நூறு ஆண்டுகள் ஆகும். ஆனால், ஒரு நாளைக்கே முப்படி ஆழத்துக்கு மேலாக ஆற்று மணலை சுரண்டி மணல் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மணற்கொள்ளையால் ஆற்றுப்படுகையில் உள்ள தென்னை, பனை மரங்கள் கூட பட்டுப்போய் நிற்கின்றன. எனவே, நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையைத் தனிப்படைகளை அமைத்து முழுமையாக தடுக்கும்.

பனை தமிழ் தேசிய மரமாக அறிவிக்கப்படும். இருக்கும் பனை மரங்களைப் பாதுகாப்பது, புதிய பனை மரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் உருவாக்கப்படும். ஊர்தோறும் இரக்கும் நீர் நிலைகளைச் சுற்றி பனைமரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுப்போம்.

வேளாண் பெருங்குடி மக்களே விலையை உறுதிப்படுத்தலாம்

குண்டூசி முதல் ஏவுகணை வரை எல்லாவற்றையும் உருவாக்குபவர்களே விலையை முடிவு செய்ய இயலுகிறது. ஆனால், வேளாண் பெருங்குடி மக்கள் மட்டும் விளைவிக்கின்ற பொருட்களுக்கு விலையை முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையை மாற்றி உழவர்களே உணவுப் பொருட்களுக்கான விலையைத் தீர்மானிக்கிற உரிமையை நாம் தமிழர் அரசு அளிக்கும்.

ஆடு, மாடு வளர்த்தல் அரசுப் பணி

ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை, வருமானம், வெகுமானம் அரசுப் பணி. ஆடு, மாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் உருவாக்கும் நடுவம் அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்று நாதக வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, March 19, 2026

இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் உளவுத் துறை அமைச்சர் உயிரிழப்பு - ஹார்முஸ் ஜலசந்தி அருகே ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசியது அமெரிக்கா

பதிவு: வியாழக்கிழமை,  மார்ச் 19, 2026, பங்குனி 05, விசுவாவசு வருடம் 06:40 AM

டெல் அவிவ், 

இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் ஈரானின் உளவுத்​துறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப் உயி​ரிழந்​துள்​ளார். மேலும், ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி அருகே ‘பங்​கர் பஸ்​டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது.

அமெரிக்க மற்​றும் இஸ்​ரேலிய படைகளுக்​கும், ஈரானுக்​கும் இடை​யில் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதனால், வளை​குடா நாடு​களிடையே பதற்​ற​மான சூழல் நிலவி வரு​கிறது. இந்​நிலை​யில், இஸ்​ரேல் நடத்​திய புதிய தாக்​குதலில் ஈரானின் உளவுத் துறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப் கொல்​லப்​பட்​ட​தாக, இஸ்​ரேலின் பாது​காப்​புத் துறை அமைச்​சர் இஸ்​ரேல் கட்ஸ் நேற்று அறி​வித்​துள்​ளார். இதை ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் உறுதி செய்துள்ளார்.

இஸ்​ரேல் நாட்டு அமைச்​சர் இஸ்​ரேல் கட்ஸ் மேலும் கூறும்​போது, “ஈரானின் எந்​தவொரு மூத்த தலை​வரையோ அல்​லது அதி​காரியையோ கொல்​லும் அதி​காரத்தை இஸ்​ரேல் ராணுவத்​துக்கு இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு வழங்​கி​யுள்​ளார். எந்​த​வித அனு​ம​தி​யை​யும் பெறாமலேயே ஈரான் மீது தாக்​குதல் மேற்​கொள்ள பிரதமர் நெதன்​யாகு எங்​களுக்கு அனு​மதி தந்​துள்​ளார். இதைத் தொடர்ந்து இஸ்​ரேல் நடத்​திய புதிய தாக்​குதலில்

ஈரான் உளவுத்துறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப் உயி​ரிழந்​து​விட்​டார். இந்த உயி​ரிழப்​பைத் தொடர்ந்து உலகின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து பல்​வேறு ஆச்​சரிய​மான தகவல்​கள் வரலாம்" என்​றார்.

ஏற்​கெனவே, இஸ்​ரேல், அமெரிக்கா ஆகிய நாடு​கள் நடத்​திய தாக்​குதல்​களில் ஈரானின் மூத்த பாது​காப்பு அதி​காரி அலி லாரிஜானி மற்​றும் பசிஜ் துணை ராணுவப் படை​யின் தலை​வர் கோலம்​ரெசா சுலை​மானி ஆகியோர் நேற்று முன்​தினம் கொல்​லப்​பட்​டனர்.

மேலும், கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் இணைந்து நடத்​திய திடீர் தாக்​குதலில் ஈரானின் தலைமை மதகுரு​வும், உச்​சத் தலை​வரு​மான அயத்​துல்லா அலி காமேனி கொல்​லப்​பட்​டார். இதையடுத்து ஈரானின் புதிய உச்​சத் தலை​வ​ராக காமேனி​யின் மகன் மோஜ்தபா காமேனி பொறுப்​பேற்​றுள்​ளார். அதனால் ஈரானில் ஆட்சி மாற்​றம், தலைமை மாற்​றம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்​பார்ப்​பது நடக்​க​வில்​லை.

முன்​ன​தாக ஈரான் மீதான தாக்​குல் காரண​மாக, ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை மூடு​வ​தாக ஈரான் அறி​வித்​தது. இந்த வழி​யாக செல்​லும் எண்​ணெய் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டன. கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து ஐந்​தில் ஒரு பங்கு ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக நடை​பெறு​வ​தால், இங்கு பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட போர்க் கப்​பல்​களை அனுப்பி நேட்டோ படைகள் உதவ வேண்​டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்​தார். அந்த கோரிக்​கையை நேட்டோ நாடு​களின் தலை​வர்​கள் நிராகரித்​தனர்.

இதையடுத்து அமெரிக்​காவே நேரடி​யாக களத்​தில் இறங்​கி​யுள்​ளது. ஹார்​முஸ் ஜலசந்​தியை ஒட்​டி​யுள்ள கரைப் பகு​தி​களில் ஈரான் ஏவு​கணை தளங்​கள் பல உள்​ளன. இங்​கிருந்​து​தான் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் செல்​லும் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படு​கிறது. பாதாளத்​தில்​உள்ள இந்த ஏவு​கணை கிடங்​கு​களை குறி வைத்து 2,200 கிலோ எடை​யுள்ள ‘பங்​கர் பஸ்​டர்’ குண்​டு​களை அமெரிக்க ராணுவம் வீசி​யது. இந்த குண்​டு​கள் பா​தாள பகு​தி​களை ஊடுருவி தாக்​கும் திறன் படைத்​தவை. இந்த குண்​டுகளை ஈ​ரான்​ மீது வெற்​றிகர​மாக வீசிய​தாக அமெரிக்​க ​ராணுவம்​ எக்​ஸ்​ தளத்​தில்​ தெரிவித்​துள்​ளது. இதுபோன்ற தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுப்போம் என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது.

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது ஈரான்

ஈரானில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை புதன்கிழமை ஈரான் வந்து சேர்ந்ததாக டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

இந்த உதவிப் பொருட்களை ஈரானில் உள்ள செம்பிறை சங்கம் பெற்றுக் கொண்டதாகவும் இந்த உதவிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் கூறியுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் ‘எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்பிற்குரிய இந்திய மக்களிடம் இருந்து பெற்ற மருத்துவ உதவிகளின் முதல் தொகுப்பு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. கனிவான இந்திய மக்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

பிற நாடுகளுக்கு உதவி வழங்கும் ஒரு முக்கிய நாடாக சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா உருவெடுத்துள்ளது. அமெரிக்க - இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் ஈரான் போராடி வரும் வேளையில் இந்த உதவி வழங்கப்படுகிறது. இப்போர் தொடங்கியதில் இருந்து ஈரானில் 1,300-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் 7,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அலி பஹ்ரேனி கூறியுள்ளார்.
 

Featured post

அதிமுக கூட்டணியில் பாஜக 27, பாமக 18, அமமுக 11 இடங்களில் போட்டி - தொகுதிப் பங்கீடு விவரம்

பதிவு:  திங்கட்கிழமை, மார்ச் 23, 2026, பங்குனி 09, விசுவாவசு வருடம் 05:20 AM சென்னை, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி ...