Friday, March 6, 2026

மாநிலங்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் 6 பேர் வேட்புமனு தாக்கல்

பதிவு: வெள்ளிக்கிழமை,  மார்ச் 06, 2026, மாசி 22, விசுவாவசு வருடம் 05:00 AM

சென்னை,

ராஜ்யசபா தேர்தலையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அண்ணா திமுக சார்பில் தம்பிதுரை, அதன் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.




 
அதேபோல திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதன் கூட்டணி கட்சி சார்பில் எல்.கே. சுதீஷ் (தேமுதிக), கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்) ஆகியோரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங் களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அண்ணா தி.மு.க.வின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடையவுள்ளது. 

மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6-ம் தேதி நடைபெறுகிறது. மார்ச்-9 ஆம் தேதி வரை மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். மாநிலங்களவை தேர்தலில் போட்டி இருந்தால் -16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 20 ஆம் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.

6 இடங்களுக்கு போட்டி

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் தி.மு.க.வுக்கும் 2 இடங்கள் அண்ணா தி.மு.க.வுக்கும் கிடைக்கும். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எஞ்சியுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திமுக கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது. திமுக சார்பில், மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக்கை கட்சியில் மேலிடம் அறிவித்துள்ளது. தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தம்பிதுரை, அன்புமணி வேட்புமனு தாக்கல்

இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அண்ணா திமுக சார்பில் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று காலை தலைமை செயலகம் வந்தார். அங்கு, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனுவை தம்பிதுரை தாக்கல் செய்தார். 

தம்பிதுரை 6 ஆவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகிறார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

அண்ணா தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை பதவிக்கு பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேர்தல் அதிகாரியான தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் அன்புமணி வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வின்போது அதிமுக நிர்வாகிகள், சவுமியா அன்புமணி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர்.

தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

இதைத் தொடர்ந்து திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர்.

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்ட நிலையில் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் ஆகியோரும் முதலமைச்சர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது தே.மு.திக. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 9-ம் தேதி ஆகும். மார்ச் 16-ம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்சிகள் சார்பில் 7 பேர், சுயேச்சைகள் 4 பேர் என மொத்தம் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ராமதாஸ் பரிந்துரைத்த சுவாமிநாதன் மற்றும் 4 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வாய்ப்பு இல்லை என்பதால் இவர்களது மனுக்கள் நிராகரிக்கப்படும்.

No comments:

Post a Comment

Featured post

தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - முதல்வர் ஸ்டாலின் உறுதி

 பதிவு: சனிக்கிழமை,  மார்ச் 07, 2026, மாசி 23, விசுவாவசு வருடம் 05:30 AM சென்னை, தமிழகத்தில் 2030-ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் - செ...