பதிவு: புதன்கிழமை, மார்ச் 25, 2026, பங்குனி 11, விசுவாவசு வருடம் 06:00 AM
சென்னை,
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டுக்கு இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதனைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பெற்றுக் கொண்டார். மொத்தமாக அதில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. அதிமுக.வின் முழு தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும். குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை செலுத்தப்படும். மகளிரைப் போலவே, ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அம்மா இல்லம் திட்டம் மூலமாக வீடு இல்லாத ஏழைகளுக்குக் கிராமங்களில் கான்கிரீட் வீடுகளும், நகர்ப்புறங்களில் அடுக்குமாடி வீடுகளும் விலையில்லாமல் கட்டித் தரப்படும்.
மேலும், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். வேலைக்குச் செல்லும் 5 லட்சம் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானியத்துடன் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். முதியோர், கணவனை இழந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும், வங்கிகளில் கல்விக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளவர்களின் கடனை அரசே ஏற்கும்.
நெல் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்தப்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு உர மானியமாக ஆண்டுக்கு எக்டேருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். விவசாயப் பணியின் போது உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
வேலைக்காகக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 450 யூனிட்டாகவும், விசைத்தறிக்கு 1,400 யூனிட்டாகவும் உயர்த்தப்படும்.
மீன்பிடித் தடைக் கால நிவாரணம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும். பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) விலையில்லாமல் வழங்கப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும்.
மத்திய வரி வசூலில் செஸ் மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றைப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் சேர்க்க வலியுறுத்தப்படும். இதுபோன்று 297 வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின், செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறும்போது,
‘‘கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஆதாரங்களைப் பெருக்கி, மக்கள் நலத்திட்டங்கள் தொய்வின்றிச் செயல்படுத்தப்படும். அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும். அரசியல் சூழலுக்குத் தகுந்தவாறுதான் கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன. அந்தந்தக் கட்சிகளின் பலத்துக்கு ஏற்பவே தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
Wednesday, March 25, 2026
அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி - அரிசி கார்டுக்கு இலவச பிரிட்ஜ் உட்பட பல திட்டங்கள் அறிவிப்பு
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
வாழும் காலத்திலேயே வரலாறு படைத்த நரேந்திர மோடி - எம்.எல்.ஏ.வாக கூட இல்லை ஆனால், முதல்-மந்திரி
பதிவு: புதன்கிழமை, மார்ச் 25, 2026, பங்குனி 11, விசுவாவசு வருடம் 08:00 AM புதுடெல்லி, ரெயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டு இருந்த சிறுவன் அ...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...

No comments:
Post a Comment