Friday, March 27, 2026

டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்ற தவெக தலைவர் விஜய் - பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க புகார்

பதிவு:  வெள்ளிக்கிழமை,  மார்ச் 27, 2026, பங்குனி 13, விசுவாவசு வருடம் 02:40 AM

சென்னை,

பெண்கள் குறித்து இழிவாக பேசிய பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று விஜய் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

சென்னையில் டிஜிபி அலுவலகத்துக்கு இன்று நேரில் சென்ற விஜய் பொன்ராஜ் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளார். இந்த மனுவை அளிக்கும் போது தவெக நிர்வாகி செங்கோட்டையனும் உடனிருந்தார்.

டிஜிபி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியை சந்தித்து விஜய் அளித்த புகார் மனுவில், 

‘ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.

தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.

இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

பெண்கள் குறித்த பொன்ராஜ் கருத்துக்கு விஜய் கண்டனம் - திமுக மீதும் காட்டமான விமர்சனம்

பதிவு:  வெள்ளிக்கிழமை,  மார்ச் 27, 2026, பங்குனி 13, விசுவாவசு வருடம் 02:30 AM

சென்னை,

தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜின் கருத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் திமுகவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.

திமுக தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். தவெகவைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நமது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், பெருமதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் பெண்களை வக்கிரமான வார்த்தைகளில் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மாபெரும் மனிதர்களிடம், சிறந்த பொறுப்பில் வேலை செய்தவர் என்றெல்லாம் சொன்னாலும், பின்னாளில் திமுக ஆதரவாளராக மாறிய பிறகு அடிப்படை அறமும், தேவையான மனித மாண்பும் துளியும் அற்றவராகவே பொன்ராஜ் செயல்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது.

எந்தவொரு சாமானிய மனிதனும் சொல்லக் கூசும் வார்த்தைகளை, ஊடகத்திற்கு முன் உட்கார்ந்துகொண்டு ஒருவர் இதுபோல் பேசுகிறார் என்றால் திமுக அதிகார பின்புலம் இல்லாமலா என்ற சந்தேகம் எழுகிறது?

இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் திமுகவுக்கு ஆதரவாகப் பேசும் நபர்களைத் தனது அமைதியின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா?

கண்ணியத்துக்குரிய தமிழ்நாட்டின் பெண்களுக்கு எதிரான வன்முறை கருத்துகளைத் தெரிவித்து பதற்றமான சூழலைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் பொன்ராஜ் மீது தேர்தல் ஆணையமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அநாகரிக அரசியலின் உச்சமாக தமிழக பெண்கள் மீது மோசமான வன்மத்தை வெளிப்படுத்தியுள்ள கருத்து எந்த நிலையிலும் ஏற்கக் கூடியதல்ல. தான் பேசிய கருத்துக்கு பொன்ராஜ், உடனடியாக தமிழக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையெனில், பெண்கள் மீது மோசமான பார்வை கொண்டவர்களுக்கு தங்கள் ஜனநாயக போராட்டத்தின் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள் தமிழக மகளிர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி

பதிவு:  வெள்ளிக்கிழமை,  மார்ச் 27, 2026, பங்குனி 13, விசுவாவசு வருடம் 01:55 AM

டெஹ்ரான்/ வாஷிங்டன்,

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடு​களின் சரக்கு கப்​பல்​கள் செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கச்சா எண்​ணெய், எல்​பிஜி எரிபொருள் கொண்டு செல்​லும் கப்​பல்​கள் செல்ல தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. ஒரு சில கப்​பல்​கள் மீது ஈரான் ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் நூற்​றுக்​கணக்​கான சரக்கு கப்​பல்​கள் அங்கு காத்​துக் கிடந்​தன.

இந்​திய கப்​பல்​களுக்கு அனு​மதி வழங்​கும்​படி ஈரான் அரசுடன் இந்​திய அரசு பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. இதே​போல, ஈரானின் நட்பு நாடு​களும் பேச்​சு​ நடத்தின. இதையடுத்து இந்​தி​யா, பாகிஸ்​தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய நட்பு நாடு​களின் கப்​பல்கள் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து ஈரான் வெளி​யுறவுத் ​துறை அமைச்சர் சையத் அப்​பாஸ் அராக்சி கூறும்போது, ‘‘ஈரான் போர் சூழலில் உள்​ளது. மேற்கு ஆசியா போர்க்​கள​மாக உள்​ளது. இதனால், இங்கு எதிரி நாடு​களின் கப்​பல்​கள் செல்ல அனு​ம​திக்க முடி​யாது. மற்​றவர்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தி திறந்​தே உள்​ளது’’ என்​றார்​.

‘உச்ச தலைவராக நியமிக்க ஆசை’ - அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் ஆளும் குடியரசுக் கட்சி சார்​பில் நேற்று முன்​தினம் நடந்த நிகழ்ச்​சி​யில் அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது: அமெரிக்​கா - ஈரான் இடையே அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறு​கிறது. ஈரானின் உச்ச தலை​வ​ராக என்னை நியமிக்க அவர்​கள் விரும்​பு​கின்​றனர். ஆனால் நான் மறுத்​து​விட்​டேன். அமெரிக்க பிர​தி​நி​தி​களு​டன் ஈரான் பிர​தி​நி​தி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.

அமெரிக்கா​வுடன் வெகு​விரை​வாக அமைதி ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த ஈரான் விரும்​பு​கிறது. ஆனால், ஈரான் பிர​தி​நி​தி​களால் இதை வெளிப்​படை​யாக கூற முடிய​வில்​லை. ஈரான் ஆட்​சி​யாளர்​கள், ராணுவதளப​தி​கள் அடுத்​தடுத்து கொல்லப்​பட்டு வரு​கின்​றனர். உயிர்பயம் காரண​மாக ஒப்​பந்​தத்தை விரைந்து இறுதி செய்ய ஈரான் பிர​தி​நி​திகள் ஆர்​வம் காட்​டு​கின்​றனர்.

ஆனால் இதை பகிரங்​க​மாக அறி​வித்தால் சொந்த நாட்டு மக்​கள் அடித்துக் கொன்​று​விடு​வார்​கள் என்று அஞ்​சுகின்​றனர். ஒரு​வேளை, ஒப்பந்​தத்தை ஏற்க மறுத்து, போரை நிறுத்த ஈரான் மறுத்தால் அந்த நாடு நரக​மாக மாறும். இவ்​வாறு ட்ரம்ப் கூறினார்.

போரை நீண்ட காலம் நீட்​டிக்க ட்ரம்ப் விரும்​ப​வில்​லை. அடுத்த சில வாரங்​களில் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இதற்கிடையே, 5 நாட்​கள் போர் நிறுத்​தம் அமலில் இருக்கும் என்று ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்​தார். போரை முடிவுக்கு கொண்டுவர, 15 அம்ச திட்டத்தையும் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த திட்டம் ஒருதலைப்பட்சமானது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவின் 15 அம்ச போர் நிறுத்த திட்டம் பாகிஸ்தான் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதை ஈரான் ஆய்வு செய்தது.

ஈரான் தனது பாதுகாப்பு திறனை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் போர் நிறுத்ததிட்டம் ஒருதலைப்பட்சமானது, நியாயமற்றது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலனுக்குத்தான் உதவும்.

ஈரான் - அமெரிக்கா இடையே சமரசம் செய்யும் முயற்சியில் துருக்கி, பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளன. நியாயமான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வர வேண்டும். ஆனால், முறையான பேச்சுவார்த்தைக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை’’ என்றார். ‘‘தோல்வியை ஈரான் ஏற்க வேண்டும் இல்லாவிட்டால், இன்னும் கடுமையாக தாக்கப்படும்’’ என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Thursday, March 26, 2026

கடைசி வாய்ப்பு - வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே இறுதி நாள்

பதிவு:  வியாழக்கிழமை, மார்ச் 26, 2026, பங்குனி 12, விசுவாவசு வருடம் 06:00 AM

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  

தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தகுதி வாய்ந்த குடிமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், விடுபட்ட நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு 26-ந் தேதிதான் (இன்று) கடைசி தேதியாகும்.

பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Wednesday, March 25, 2026

வாழும் காலத்திலேயே வரலாறு படைத்த நரேந்திர மோடி - எம்.எல்.ஏ.வாக கூட இல்லை ஆனால், முதல்-மந்திரி

பதிவு:  புதன்கிழமை, மார்ச் 25, 2026, பங்குனி 11, விசுவாவசு வருடம் 08:00 AM

புதுடெல்லி,

ரெயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டு இருந்த சிறுவன் அதே ரெயில் நிலையம் இருக்கும் மாநிலத்தின் முதல்-மந்திரியாகவும், அந்த மாநிலத்தை உள்ளடக்கிய நாட்டின் பிரதமராக மட்டுமல்லாமல் உலக நாடுகளே பாராட்டும் அளவுக்கு செயல்படுபவராகிறார் என்றால் அது இந்திய ஜனநாயகத்தில்தான் முடியும். அதுதான் நமது ஜனநாயகத்தின் வலிமை.

சிறுவயதில் ஏழ்மை காரணமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வட்நகர் ரெயில் நிலையத்தில் டீ விற்ற நரேந்திர மோடி சமூகத்துக்கு சேவை செய்யவேண்டும் என்ற தணியாத ஆர்வம் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பிரசாரகராக இணைந்து தனது பொதுவாழ்க்கையை தொடங்கினார். அவரது பொதுசேவையை பார்த்த பல தலைவர்களின் அன்புக்குரியவராக மாறினார்.

இதனைத்தொடர்ந்து பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் பணி, கட்சி பணி என்று ஒரேநேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்தார். அவருடைய பணிகளின் வேகம் விஸ்வரூபம் எடுத்தது. படிப்படியாக உயர்ந்து தேசிய பொதுச்செயலாளர் ஆனார். 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இருந்தபோது அவருக்கு டெலிபோனில் ஒரு அழைப்பு வந்தது. 

மறுமுனையில் அவரிடம் பேசியவர் வேறு யாரும் இல்லை, அப்போதைய பிரதமர் வாஜ்பாய்தான். என்னை மாலையில் வந்து சந்தியுங்கள் என்று வாஜ்பாய் கூறினார். இதனை ஏற்று சந்தித்தபோது குஜராத் சென்று முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வாஜ்பாய் அன்பு கட்டளை பிறப்பித்தார். அப்போது நரேந்திர மோடி எம்.எல்.ஏ.வாக கூட இல்லை.

பிரதமரின் கட்டளையை ஏற்று 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி குஜராத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று அதன்பிறகு 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் ராஜ்காட்-2 தொகுதியில் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆனார். இதையடுத்து அவரது அரசியல் பயணம் எங்கும் தடைபட்டதில்லை. தொட்டதெல்லாம் துலங்கும் என்பதுபோல எதிலும் வெற்றி, எப்போதும் வெற்றி என்றவகையில் பீடு நடைபோட்டார்.

முதல்-மந்திரியாக 4,612 நாட்கள் அதாவது 13 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பதவியை அலங்கரித்தார். இதற்கு பிறகு பிரதமர் பதவியும் அவரை தேடி வந்தது. அதற்காக 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் பிரதமராகத்தான் நுழைந்தார். இந்திய வரலாற்றில் காங்கிரஸ் கட்சி இல்லாத ஒரு கட்சியின் சார்பில் தனிப்பெரும்பான்மையோடு பிரதமர் பொறுப்பையேற்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்றால் அது நரேந்திர மோடிதான்.

அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி - அரிசி கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ் உட்பட பல திட்டங்கள் அறிவிப்பு

பதிவு:  புதன்கிழமை, மார்ச் 25, 2026, பங்குனி 11, விசுவாவசு வருடம் 06:00 AM

சென்னை,

தமிழகத்​தில் அதி​முக ஆட்​சிக்கு வந்​தால், அரிசி ரேஷன் கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தேர்​தல் வாக்​குறு​தி​களாக அளித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் 234 தொகு​தி​களுக்​கும் ஏப்​ரல் 23-ம் தேதி ஒரே கட்​ட​மாகத் தேர்​தல் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், தேர்​தல் அறிக்​கையை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று வெளி​யிட்​டார். அதனைக் கட்​சி​யின் துணைப் பொதுச் செய​லா​ளர் கே.பி.முனு​சாமி பெற்​றுக் கொண்​டார். மொத்​த​மாக அதில் 297 அறி​விப்​பு​கள் இடம்​பெற்​றிருக்​கின்​றன. அதி​முக.வின் முழு தேர்​தல் அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

வரிச் சுமை மற்​றும் விலை​வாசி ஏற்​றத்​தைச் சமாளிக்க ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்​கப்​படும். குல விளக்கு திட்​டத்​தின் கீழ் அனைத்து குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்​கும் குடும்​பத் தலை​வி​யின் வங்​கிக் கணக்​கில் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை செலுத்​தப்​படும். மகளிரைப் போல​வே, ஆண்களுக்​கும் நகரப் பேருந்​துகளில் கட்​ட​ணமில்லா பயணத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

அம்மா இல்​லம் திட்​டம் மூல​மாக வீடு இல்​லாத ஏழைகளுக்​குக் கிராமங்​களில் கான்​கிரீட் வீடு​களும், நகர்ப்​புறங்​களில் அடுக்​கு​மாடி வீடு​களும் விலை​யில்​லாமல் கட்​டித் தரப்​படும்.

மேலும், 100 நாட்​கள் வேலை​வாய்ப்​புத் திட்​டம் 150 நாட்​களாக உயர்த்​தப்​படும். வேலைக்​குச் செல்​லும் 5 லட்​சம் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானி​யத்​துடன் இரு சக்கர வாக​னங்​கள் வழங்​கப்​படும். ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர்​கள் விலை​யில்​லாமல் வழங்​கப்​படும். முதி​யோர், கணவனை இழந்​தவர்​கள் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான ஓய்​வூ​தி​யம் ரூ.2 ஆயிரமாக உயர்த்​தப்​படும், வங்​கி​களில் கல்விக் கடன் பெற்​றுத் திருப்​பிச் செலுத்த முடி​யாமல் உள்​ளவர்​களின் கடனை அரசே ஏற்​கும்.

நெல் ஆதார விலை குவிண்​டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு டன் ஒன்​றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்​தப்​படும். சிறு, குறு விவ​சா​யிகளுக்கு உர மானிய​மாக ஆண்​டுக்கு எக்​டேருக்கு ரூ.15 ஆயிரம் வழங்​கப்​படும். விவ​சாயப் பணி​யின் போது உயி​ரிழக்​கும் விவ​சா​யிகளின் குடும்​பத்​துக்கு ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்​கப்​படும்.

வேலைக்​காகக் காத்​திருக்​கும் பட்​ட​தாரி இளைஞர்​களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் மற்​றும் பிளஸ் 2 முடித்​தவர்​களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்​கப்​படும். கைத்​தறி நெச​வாளர்​களுக்கு விலை​யில்லா மின்​சா​ரம் 450 யூனிட்​டாக​வும், விசைத்​தறிக்கு 1,400 யூனிட்டாக​வும் உயர்த்​தப்​படும்.

மீன்​பிடித் தடைக் கால நிவாரணம் ரூ.12 ஆயிர​மாக உயர்த்​தப்​படும். பொங்​கல் தொகுப்​புடன் ரூ.1,000 ரொக்​கம் வழங்​கப்​படும். அரிசி குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு குளிர்​சாதனப் பெட்டி (பிரிட்​ஜ்) விலை​யில்​லாமல் வழங்​கப்​படும். ஜல்​லிக்​கட்​டுப் போட்​டி​யில் உயி​ரிழக்​கும் வீரர்​களின் குடும்​பத்​துக்கு ரூ.10 லட்​சம் வழங்​கப்​படும். கல்வி மற்​றும் மருத்து​வம் ஆகிய துறை​களைப் பொதுப் பட்​டியலில் இருந்து மாநிலப் பட்​டியலுக்கு மாற்ற வலி​யுறுத்​தப்​படும்.

மத்​திய வரி வசூலில் செஸ் மற்​றும் கூடு​தல் வரி ஆகிய​வற்​றைப் பகிர்ந்​தளிக்​கப்​படும் நிதி​யில் சேர்க்க வலி​யுறுத்​தப்​படும். இது​போன்று 297 வாக்​குறு​தி​கள் அதி​முக தேர்​தல் அறிக்​கை​யில் இடம்​பெற்​றுள்​ளன.

தேர்​தல் அறிக்கை வெளி​யிட்ட பின், செய்​தி​யாளர்​களிடம் பழனி​சாமி கூறும்போது, 

‘‘கூட்​ட​ணி​யில் உள்ள சிறிய கட்​சிகளுக்​கான தொகு​திப் பங்​கீடு விரை​வில் இறுதி செய்​யப்​படும். மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தவுடன் நிதி ஆதா​ரங்​களைப் பெருக்​கி, மக்​கள் நலத்​திட்​டங்​கள் தொய்​வின்​றிச் செயல்​படுத்​தப்​படும். அதி​முக மீண்​டும் ஆட்​சிப் பொறுப்​பேற்​றதும் தமிழகத்​தில் மதுக்​கடைகள் படிப்​படி​யாகக் குறைக்​கப்​படும். அரசி​யல் சூழலுக்​குத் தகுந்​த​வாறு​தான் கூட்​ட​ணி​கள் அமைக்​கப்​படு​கின்​றன. அந்​தந்​தக் கட்​சிகளின் பலத்​துக்​கு ஏற்​பவே தொகு​தி​கள்​ ஒதுக்​கீடு செய்​யப்​படு​கின்​றன” என்று தெரிவித்​தார்​.

Tuesday, March 24, 2026

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு - மதுரை நீதிமன்றத்தில் மார்ச் 30-ல் தண்டனை விவரம் அறிவிப்பு

பதிவு:  செவ்வாய்க்கிழமை, மார்ச் 24, 2026, பங்குனி 10, விசுவாவசு வருடம் 04:50 AM

மதுரை,

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கரோனா ஊரடங்கின்போது கட்டுப்பாட்டு நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி இவர்கள் இருவரையும் போலீஸார் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

ஆனால், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதில் ஜூன் 22-ம் தேதி பென்னிக்ஸும், 23-ம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை - மகன் காவல் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர், ஜெயராஜ் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியது.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10 பேரும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பால்துரை சிறையில் இருந்துபோது கரோனா தொற்றால் உயிரிழந்தார். மற்றவர்களது ஜாமீன் மனுக்கள் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்தார். இதற்கு சிபிஐ ஆட்சேபம் தெரிவித்ததால் அவரது மனு தள்ளுபடியானது.

சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸார் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக நடந்த வந்த இந்த வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் நேற்று (மார்ச் 23) தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தந்தை, மகன் இருவரையும் கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் போலீஸார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உருவாகும் வகையில் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறாக, மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு இருந்துள்ளன.

இதுபோன்ற கொடூர தாக்குதல்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல போலீஸார் தாக்கியுள்ளனர். இருவரையும் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீஸார் தாக்கியுள்ளனர். போலீஸார் இரவு முழுவதும் இடைவெளி விட்டு தன்னை தாக்கியதாகவும், 200 முறைக்கு மேல் தனது பின்பகுதியில் தாக்கியதாகவும் உறவினர்களிடம் பென்னிக்ஸ் தெரிவித்துள்ளார்.

தவிர, இருவர் மீதும் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். தந்தை, மகனின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை உறவினர்களிடம் கொடுத்து குப்பைத் தொட்டியில் போடச் சொல்லியுள்ளனர்.

போலீஸ் தாக்கியதில்தான் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. சாட்சியங்களின் அடிப்படையில் 9 பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்யப்படுகிறது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும்.

இவர்களது சம்பள விவரங்களை தூத்துக்குடி எஸ்.பி.யும், சொத்து விவரங்களை தூத்துக்குடி, நெல்லை, தேனி எஸ்.பி.க்களும், நன்னடத்தை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

நீதிபதி முத்துக்குமரன் 265 பக்க தீர்ப்பை மாலை 4 மணிக்கு வாசிக்கத் தொடங்கி 5.30 மணிக்கு முடித்தார். முன்னதாக, 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 9 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, அவர்களை சிறையில் அடைக்கவும், மார்ச் 30-ல் தண்டனை அறிவிப்புக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். தொடர்ந்து 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

‘உச்சபட்ச தண்டனை’

தீர்ப்பைக் கேட்பதற்காக, கொலையான ஜெயராஜ் மனைவி செல்வராணி மற்றும் அவரது குடும்பத்தினர் நீதிமன்றம் வந்திருந்தனர். தீர்ப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் செல்வராணி மற்றும் அவரது மகள்கள் கூறியபோது, “இதுபோல வேறு எந்த குடும்பமும் பாதிக்கப்படக்க கூடாது. 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்றனர்.

Featured post

“எப்படியாவது உதயநிதியை முதல்வராக்கவே ஸ்டாலின் பாடுபடுகிறார்” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 30, 2026, பங்குனி 16, விசுவாவசு வருடம் 02:00 A M நாகர்கோவில், “எப்படியாவது உதயநிதியை முதல்வராக்குவதற்குத் தான் ஸ...