Monday, March 9, 2026

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் - முதன்முறையாக பட்டத்தை தக்கவைத்தும், 3-வது முறையாக கோப்பையை வென்றும் சாதனை

பதிவு: திங்கள்க்கிழமை,  மார்ச் 09, 2026, மாசி 25, விசுவாவசு வருடம் 04:00 AM

அகமதாபாத்,

ஐசிசி டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் வீச்சில் போல்டாகிறார் நியூஸிலாந்து பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ். இந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்ததுடன் 3-வது முறையாக கோப்பையை வென்றும் சாதனை படைத்தது.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சுழற்பந்து வீச்சாளரான கோல் மெக்கோன்ஜி நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட் செய்தது. மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரின் 4 பந்துகளிலும் தடுப்பாட்டம் மேற்கொண்ட சஞ்சு சாம்சன் 5-வது பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்டன.

கிளென் பிலிப்ஸ் வீசிய 2-வது ஓவரில் 5 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஜேக்கப் டஃபி வீசிய 3-வது ஓவரில் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசையில் பவுண்டரிகளை விரட்டினார். சஞ்சு சாம்சன் தனது பங்குக்கு கடைசி பந்தை பவுண்டரிக்கு விளாச இந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் விளாசப்பட்டன. லாக்கி பெர்குசன் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை தேர்டு மேன் திசையில் பவுண்டரிக்கு விரட்டிய அபிஷேக் சர்மா அடுத்த பந்தை மிட் ஆஃப் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.

தொடர்ந்து சஞ்சு சாம்சன் தலா ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் விரட்ட இந்த ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டன. 4 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 51 ரன்களை சேர்த்தது. மேட் ஹென்றி வீசிய அடுத்த ஓவரில் அபிஷேக் சர்மா லாங் ஆஃப் திசையிலும், சஞ்சு சாம்சன் ஸ்கொயர் லெக் திசையிலும் சிக்ஸர் விளாசினர். இந்த ஓவரில் மேட் ஹென்றி 4 வைடுகளையும் வீசினார். இதனால் ஓட்டுமொத்தமாக அவர், 21 ரன்களை வாரி வழங்கினார்.

ஜேக்கப் டஃபி வீசிய 6-வது ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசி மிரளச் செய்தார் அபிஷேக் சர்மா. மட்டையை சுழற்றிய அபிஷேக் சர்மா 18 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். சர்வதேச டி 20 அரங்கில் இது அவரது 6-வது அரை சதமாக அமைந்தது.இந்த ஜோடியின் அதிரடியால் இந்திய அணி பவர்பிளேவில் 92 ரன்களை குவித்தது. மிட்செல் சாண்ட்னர் வீசிய 7-வது ஓவரில் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ரச்சின் ரவீந்திரா வீசிய 8-வது ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வைடாக வீசிய பந்தை அபிஷேக் சர்மா அடிக்க முயன்ற போது விக்கெட் கீப்பர் டிம் ஷெய்பர்ட்டிடம் கேட்ச் ஆனது.

21 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஜோடி 7.1 ஓவர்களில் 98 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷனும் மட்டையை சுழற்றினார். ரச்சின் ரவீந்திரா வீசிய இந்த ஓவரின் கடைசி 2 பந்துகளையும் இஷான் கிஷன் பவுண்டரிக்கு விரட்டினார்.

மிட்செல் சாண்ட்னர் வீசிய 9-வது ஓவரில் 5 ரன்களை வழங்கினார். ஜேம்ஸ் நீஷம் வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் தலா ஒரு பவுண்டரியை அடித்தனர். இந்த ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டன. 10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 127 ரன்களை குவித்தது. தொடர்ந்து மிட்செல் சாண்ட்னர் வீசிய 11-வது ஓவரின் 3-வது பந்தை இஷான் கிஷன் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் விளாசினார்.

சீராக ரன்கள் சேர்த்த சஞ்சு சாம்சன் 33 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் தனது 6-வது அரை சதத்தை கடந்தார். லாக்கி பெர்குசன் வீசிய 12-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியையும் இஷான் கிஷன் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியையும் விளாசி மிரட்டினர்.

இந்த ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தன. மேட் ஹென்றி வீசிய 13-வது ஓவரின் 2-வது பந்தை இஷான் கிஷன் லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டன.

ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரின் கடைசி 3 பந்துகளையும் சஞ்சு சாம்சன் சிக்ஸருக்கு பறக்க விட இந்த ஓவரில் 20 ரன்கள் குவிக்கப்பட்டன. மிட்செல் சாண்ட்னர் வீசிய 15-வது ஓவரில் இஷான் கிஷன் மிட் விக்கெட் திசையில் சிக்ஸரையும், நேர் திசையில் பவுண்டரியையும் விரட்டினார். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 23 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இது அவருக்கு 10-வது அரை சதமாக அமைந்தது.

இந்த ஜோடியின் தாக்குதல் ஆட்டத்தால் இந்திய அணி 15 ஓவர்களில் 203 ரன்கள் குவித்தது. கடும் அச்சுறுத்தல் கொடுத்த இந்த ஜோடியை அடுத்த ஓவரில் ஜேம்ஷ் நீஷம் பிரித்தார். ஜேம்ஸ் நீஷம் வீசிய ஃபுல்டாஸ் பந்தை சஞ்சு சாம்சன் லாங் ஆன் திசையில் தூக்கி அடித்த போது பதிலி வீரரான மெக்கோன்ஜியிடம் கேட்ச் ஆனது. 46 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசினார். 2-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஜோடி 48 பந்துகளில் 105 ரன்கள் குவித்தது.

இதே ஓவரில் ஜேம்ஸ் நீஷம் மேலும் 2 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு திடீரென நெருக்கடியை கொடுத்தார். அவர், தாழ்வாக வீசிய புல்டாஸ் பந்தை இஷான் கிஷன், லாங் ஆன் திசையில் விளாசிய போது மார்க் சாப்மேனிடம் கேட்ச் ஆனது.

இஷான் இஷன் 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஆஃப் சைடில் வீசப்பட்ட பந்தை தனது வழக்கமான பாணியில் டீப் பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு விளாச முயன்றார்.

அப்போது எல்லைக்கோட்டுக்கு அருகே ரச்சின் ரவீந்திரா பாய்ந்தபடி அற்புதமாக கேட்ச் செய்தார். இதனால் சூர்யகுமார் யாதவ் தனது ரன் கணக்கை தொடங்கும் முன்னரே வெளியேறினார். ஜேம்ஸ் நீஷம் ஒட்டுமொத்தமாக இந்த ஓவரில் ஒரு ரன்னை மட்டுமே வழங்கிய நிலையில் 3 விக்கெட்களை சாய்த்தார். இதையடுத்து ஹர்திக் பாண்டியாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். ஜேக்கப் டஃபி வீசிய 17-வது ஓவரில் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

ஜேம்ஸ் நீஷம் வீசிய 18-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு பவுண்டரியை விரட்ட 9 ரன்கள் சேர்க்கப்பட்டன. மேட் ஹென்றி வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா அடுத்த பந்தை விளாச முயன்ற போது கவர் திசையில் நின்ற மிட்செல் சாண்ட்னரிடம் கேட்ச் ஆனது. ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில், தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 18 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, ஜேம்ஸ் நீஷம் வீசிய கடைசி ஓவரின் முதல்பந்தை பவுண்டரிக்கும் அடுத்த இரு பந்துகளை சிக்ஸருக்கும் பறக்கவிட்டார். இதன் பின்னர் 4-வது மற்றும் கடைசி பந்தை பவுண்டரியாக மாற்றினார். இந்த ஓவரில் 24 ரன்கள் விளாசப்பட்டன. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. ஷிவம் துபே 8 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களும், திலக் வர்மா 6 பந்துகளில், 8 ரன்களும் சேர்த்தனர்.

இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்துக்குள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி, ரோஹித் சர்மா ஆகியோர் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான டிராபியை கொண்டு வந்தனர்.

நியூஸிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 256 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிம் ஷெய்பர்ட் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் மிட்செல் சாண்ட்னர் 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் சேர்த்தனர். ஃபின் ஆலன் 9, ரச்சின் ரவீந்திரா 1, கிளென் பிலிப்ஸ் 5, மார்க் சாப்மேன் 3, டேரில் மிட்செல் 17, ஜேம்ஸ் நீஷம் 8, மேட் ஹென்றி 0 ரன்களில் நடையை கட்டினர்.

இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் வழங்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அக்சர் படேல் 3 ஓவர்களை வீசி 27 ரன்களை வழங்கி 3 விக்கெட்களை சாய்த்தார். ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.


 இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற சாதனையையும், சொந்த மண்ணில் முதன்முறையாக கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்திய அணி படைத்தது. இந்திய அணி கடந்த 2007 மற்றும் 2024-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருந்தது.

டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 3 முறை கோப்பையை வென்றது இல்லை. அதிகபட்சமாக மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகள் தலா 2 முறை மட்டுமே கோப்பையை வென்றிருந்தன.சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கோப்பையுடன் ரூ.27.48 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.14.65 கோடியை பெற்றது.

டாப் 3 அரை சதம்

டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்

களான சஞ்சு சாம்சன் 89, அபிஷேக் சர்மா 52, இஷான் கிஷன் 54 ரன்கள் விளாசினர். டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அனைவரும் அரை சதம் அடிப்பது இதுவே முதன்முறையாகும்.

அன்று கண்ணீர்.. இன்று மகிழ்ச்சி.. 

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டிருந்தது. அந்தத் தொடர் முழுவதும் அபாரமான திறனை வெளிப்படுத்தி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வலம் வந்திருந்த இந்திய அணிக்கு இறுதிப் போட்டி தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளித்தது. கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயமும் நொறுங்கியது. அதே மைதானத்தில் தற்போது இந்திய அணி டி 20 உலகக் கோப்பையை வென்றது அசத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 7.2 ஓவர்களில் 100 ரன்களை குவித்தது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றின் நாக் அவுட் சுற்றில் ஓர் அணி விரைவாக 100 ரன்களை எட்டியது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதியில் நியூஸிலாந்து அணி 7.5 ஓவர்களில் 100 ரன்களை குவித்து இருந்தது.

வாரி வழங்கிய பெர்குசன்

டி 20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் 4-வது ஓவரிலும், 12-வது ஓவரிலும் தலா 24 ரன்களை தாரை வார்த்தார். அவரை தொடர்ந்து ஜேம்ஷ் நீஷம் 20-வது ஓவரில் 24 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இதன் மூலம் இவர்கள் இருவரும், டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவின் அக்சர் படேல் ஆகியோருடன் இணைந்தனர். பென் ஸ்டோக்ஸ் 2016-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும், அக்சர் படேல் 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் 24 ரன்களை வழங்கியிருந்தனர்.

‘நம்பர் 2 முத்திரை’ - நியூஸிலாந்து அணி கடந்த 11 வருடங்களாக ஐசிசி நடத்தும் தொடர்களில் 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதில் அந்த அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டுமே பட்டம் வென்றது. 50 ஓவர், டி 20 வடிவிலான போட்டிகளில் அந்த அணி 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. கடந்த 2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த நியூஸிலாந்து அணி இம்முறை இந்தியாவிடம் வீழ்ந்துள்ளது. இதனால் நியூஸிலாந்து அணி மீது உள்ள ‘நம்பர் 2’ முத்திரை தொடர்கிறது.

தேசிய கீதம் பாடிய கவிதா கிருஷ்ணமூர்த்தி

அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி வீரர்களும் மைதானத்தில் திரண்டிருந்தனர். அப்போது தேசிய கீதத்தை பிரபல பின்னணிப் பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி பாடினார். 68 வயதாகும் கவிதா கிருஷ்ணமூர்த்தி மைதானத்துக்கு வந்து தேசிய கீதத்தை பாடியது இந்திய ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. தமிழ், இந்தி உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பின்னணிப் பாடல்கள் பாடியவர் கவிதா கிருஷ்ணமூர்த்தி. தமிழரான இவர், வயலின் இசைக்கலைஞரான எல்.சுப்பிரமணியத்தைத் திருமணம் செய்து கொண்டார்.

No comments:

Post a Comment

Featured post

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் - முதன்முறையாக பட்டத்தை தக்கவைத்தும், 3-வது முறையாக கோப்பையை வென்றும் சாதனை

பதிவு: திங்கள்க்கிழமை,  மார்ச் 09, 2026, மாசி 25, விசுவாவசு வருடம் 04:00 AM அகமதாபாத், ஐசிசி டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந...