Wednesday, March 11, 2026

விஸ்வரூபம் எடுக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு எப்படி சமாளிக்க போகிறது இந்தியா? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை - ஓட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் ஸ்தம்பிப்பு


 பதிவு: புதன்கிழமை,  மார்ச் 11, 2026, மாசி 27, விசுவாவசு வருடம் 05:50 AM

புதுடெல்லி,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஓட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வயல்கள், இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கி உள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் 85 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து, எல்பிஜி காஸ் போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.

இந்தியாவில் சுமார் 90 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. இதனால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை, விலையும் உயர்த்தப்படவில்லை. ஆனால், சமையல் காஸ் (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எல்பிஜி.யைப் பொறுத்த வரையில் சுமார் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் 40 சதவீதத்தைக் கத்தார் பூர்த்தி செய்கிறது. 

ஈரான் தாக்குதல் காரணமாக கத்தாரின் முன்னணி நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டன.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கியிருப்பதால் இந்திய பொதுத் துறை, தனியார் நிறுவனங்களால் எல்பிஜியை இறக்குமதி செய்ய முடியவில்லை. பொதுவாக இந்தியாவிடம் சுமார் 21 நாட்களுக்கு தேவையான எல்பிஜி மட்டுமே இருப்பில் வைக்கப்பட்டிருக்கும்.

அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் 10 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் நிலையில் இந்தியாவின் எல்பிஜி இருப்பு கணிசமாக குறைந்து வருகிறது.

இதன் எதிர்விளைவாக நாடு முழுவதும் சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில், வணிகநிறுவனங்களுக்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வணிக எல்பிஜி சிலிண்டர்கள் இல்லாமல் ஆயிரக்கணக்கான ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன.

மும்பையில் சுமார் 3,869 பெரிய ஓட்டல்களும் ஆயிரக்கணக்கான சிறிய ஓட்டல்களும் செயல்படுகின்றன. வணிக எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக 50 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளன.

சென்னை, புனே, கொல்கத்தா, டெல்லி உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஓட்டல் தொழில் முடங்கிவருகிறது. நாடு முழுவதும் 33 கோடி வீட்டு

உபயோக சமையல் காஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதோடு நாடு முழுவதும் 70.75 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எல்பிஜி விநியோகிக்கப்படுகிறது.

தட்டுப்பாடு காரணமாக வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. போர் நீடிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் முன்கூட்டியே எல்பிஐ சிலிண்டரை முன்பதிவு செய்து வருகின்றனர்.

சுமார் 20 சதவீதம் அளவுக்கு முன்பதிவு அதிகரித்திருக்கிறது. இதனால் சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் மிக நீண்ட தாமதம் ஏற்பட்டு வருகிறது.

டேங்கர் லாரிகள் நிறுத்தம்

தமிழ்​நாடு, கேரளா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கர்​நாட​கா, புதுச்​சேரி ஆகிய 6 மாநிலங்​களை உள்​ளடக்​கிய தென் மண்டல எல்​பிஜி காஸ் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் சங்​கம் நாமக்​கல்லை தலைமை இடமாக கொண்டு செயல்​படு​கிறது. இந்த சங்​கத்​தில் 4 ஆயிரம் காஸ் டேங்​கர் லாரி​கள் உள்​ளன.

போர் பாதிப்பு காரண​மாக இந்​தி​யா​வில் வர்த்தக காஸ் விநி​யோகம் முற்​றி​லும் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதனால் 25 சதவீதத்​துக்​கும் மேற்​பட்ட காஸ் டேங்​கர் லாரி​கள் லோடு இல்​லாமல் ஆங்​காங்கே நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புவி அரசியல் (ஈரான் போர்) காரணமாக எல்பிஜி இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை சமாளிக்க பொதுத்துறை, தனியார் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு தடையின்றி எல்பிஜி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வணிக நிறுவனங்களுக்கான எல்பிஜி விநியோகம் தொடர்பாக 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு மத்திய பெட்ரோலியத் துறை தெரிவித்துள்ளது.

எஸ்மா சட்டம் அமல்

எல்பிஜி தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை (எஸ்மா) மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதன்படி எல்பிஜி சிலிண்டர்களை பதுக்கினால் எஸ்மா சட்டத்தின்படி 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் எல்பிஜி கிடைப்பது உறுதி செய்யப்படும். எல்பிஜி விநியோகத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எல்பிஜி உற்பத்தித் துறையில் வேலைநிறுத்தம் முழுமையாக தடை செய்யப்படும். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி அவசர ஆலோசனை

சமையல் காஸ் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பெட்ரோலியத் துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் தடையின்றி சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மாற்று வழிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

No comments:

Post a Comment

Featured post

விஸ்வரூபம் எடுக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு எப்படி சமாளிக்க போகிறது இந்தியா? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை - ஓட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் ஸ்தம்பிப்பு

  பதிவு: புதன்கிழமை,  மார்ச் 11, 2026, மாசி 27, விசுவாவசு வருடம் 05:50 AM புதுடெல்லி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால...