பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 30, 2026, பங்குனி 16, விசுவாவசு வருடம் 01:00 AM
சென்னை,
சென்னையில் திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். உடன் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். வருமான வரி செலுத்தாத குடும்பத்தை சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன், மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்பில் கூப்பன் வழங்கும் 'இல்லத்தரசி' திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று வெளியிட்டார். அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகால ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி தமிழகத்தை அனைத்து துறையிலும் வளர்த்தோம்.
தொலைநோக்குத் திட்டங்கள் மூலமாக தமிழகம் முழுமையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் கல்வியை, கட்டமைப்பை, சமூகநீதியை, இதுவரை நாம் அடைந்த முன்னேற்றத்தை பாதுகாக்க வேண்டுமானால் திமுக ஆட்சி தொடர வேண்டும். திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும்.
அதற்கு அடித்தளமாக, உங்களின் கனவுகளை நிறைவேற்ற ‘ஸ்டாலின் ஸ்டேட்மென்ட்டை (Stalin Statement)’ வழங்கியிருக்கிறேன். அதன் விரிவாக்கம்தான் திமுகவின் தேர்தல் அறிக்கை. வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி. பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன், மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்கிக்கொள்ள அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாக பெற்றுக்கொள்ள ‘இல்லத்தரசி' திட்டம் செயல்படுத்தப்படும்.
முதல்வரின் காலை உணவு திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். 1.31 கோடி சகோதரிகள் பெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நவீன மின் பம்ப்செட் வழங்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டுத்தொகை ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும். நெல் கொள்முதல் விலை குவின்டாலுக்கு ரூ.3500, கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1,200-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆகவும் உயர்த்தப்படும்.
மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாகவும், மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாகவும் உயர்த்தப்படும். சுயஉதவிக் குழு உறுப்பினராக இருக்கும் பெண்களை, தொழில் முனைவோராக முன்னேற்ற பிணையின்றி ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
பேரிடர் கால இழப்பீடுகள் ஹெக்டேர் ஒன்றுக்கு, இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெற்பயிர்களுக்கு ரூ.25 ஆயிரம், நீண்டகால பயிர்களுக்கு ரூ.27 ஆயிரம், மானாவரி பயிருக்கு ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும். 8-வது ஊதியக்குழு அறிக்கையை மத்திய அரசு செயல்படுத்தியதும், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் செயல்படுத்தப்படும். 1.50 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு 5 ஆண்டுகளில் மடிக்கணினி வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி ரூ.2.50 லட்சம் கோடியில்இருந்து ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படும். ஆயிரம் கிராம தெய்வ கோயில்கள் மறுசீரமைக்கப்படும். 5 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.
சிறுபான்மையினர் தொழில் தொடங்க டாம்கோ (TAMCO) மூலம் கடன் பெறும் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும். முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் ரூ.10 ஆயிரம் கோடியில் சீரமைக்கப்படும். அனைத்து மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள் அமைக்கப்படும். திருச்சி, மதுரை, கோவை, சேலம் மாநகராட்சிகளின் அருகில் நவீன உலகத்தர வசதிகளுடன் புதிய நகரங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.
தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. இப்போது இது சூப்பர் ஸ்டாராக களமிறங்கியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்குறுதிகளும் சட்டங்கள், மாபெரும் திட்டங்களாகவும் மாறும். இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் அறிக்கையில் 50 தலைப்புகளில் 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்துள்ளார்.தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் கனிமொழி, உறுப்
பினர்கள் டிகேஎஸ். இளங்கோவன், கோவி.செழியன், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்,டிஆர்பி. ராஜா உள்ளிட்டோரை முதல்வர் கவுரவித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கனிமொழி எம்.பி. கூறும்போது, ‘‘திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இதில் உண்மையை பேசக்கூடியதேர்தல் அறிக்கை எதுவோ,யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்களோ, அந்த தேர்தல் அறிக்கைக்குதான் மரியாதையும் செல்வாக்கும் இருக்கும்’’ என்று தெரிவித்தார்.
Monday, March 30, 2026
இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் - திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் - முழு விபரம்
South Indian Crime Point - Investigation Weekly Tamil Magazine. Every Week Wednesday Publish. Available All News Paper Marts. Rs.20/ Only. Contact +91-7200557999.சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் - அரசியல், புலனாய்வு வார இதழ், ஒவ்வொரு புதன் தோறும் வெளிவருகிறது. விலை. ரூ. 20/. மட்டுமே. Contact +91-7200557999.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
“எப்படியாவது உதயநிதியை முதல்வராக்கவே ஸ்டாலின் பாடுபடுகிறார்” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 30, 2026, பங்குனி 16, விசுவாவசு வருடம் 02:00 A M நாகர்கோவில், “எப்படியாவது உதயநிதியை முதல்வராக்குவதற்குத் தான் ஸ...
-
பதிவு: திங்கள்க்கிழமை, ஜனவரி 12, 2026, மார்கழி 28, விசுவாவசு வருடம் 03:40 AM சென்னை, அம்பத்தூர் பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதை த...

No comments:
Post a Comment